Friday, July 20, 2012

தி டார்க் நைட் ரைசெஸ் / ரைசிஸ் | The Dark Knight Rises Review


ஜோக்கர் மற்றும் டூ ஃபேஸ் ஆகிய வில்லன்களை முறியடித்தபின் பேட்மேன் என்ன ஆகிறார்? 



இந்தக் கேள்விக்குப் பதிலாக நோலனுக்கு ஒரு பொருத்தமான கதை கிடைக்காததால்தான், The Dark Knight படத்துக்குப் பின்னர் அடுத்த பாகம் உடனடியாக ஆரம்பிக்கவில்லை. Inception எடுக்கப் போய்விட்டார் நோலன். அப்போதுகூட, மூன்றாம் பாகம் பற்றி மறுத்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார் நோலன் என்று தெரிகிறது. காரணம் - "இதுவரை வந்துள்ள மூன்றாம் பாகங்களில், எந்தப் படங்கள் உங்களுக்கு நன்றாக நினைவிருக்கின்றன சொல்லுங்கள்? மூன்றாம் பாகம் ஒன்றை எடுத்தால் அதனை ஆடியன்ஸ் மறக்கவே முடியாதவாறு எடுக்கவேண்டும். சும்மா பணத்துக்காக எடுத்துவிட்டு அது மொக்கையாக ஆகிவிட்டால் என்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று நோலன் ஏற்கெனவே சொல்லியிருந்தார்.

இன்செப்ஷன் படத்தை முடித்தபின், அதன் Post Production நடந்துகொண்டிருந்தபோதுதான் நோலன் மூன்றாம் பாகத்தை எடுக்க சம்மதித்துவிட்டார் என்ற செய்தி பரவியது. அப்போதுதான் அவருக்கு அழுத்தமான கதை ஒன்று கிடைத்திருந்தது. கதையை முடிவு செய்தவர்களில், நாம் ஏற்கெனவே பார்த்திருக்கும் David S Goyer ஒருவர். இவரது கதையை நோலன் டெவலப் செய்தார். அதன்பின் திரைக்கதை எழுதும் சூழ்நிலையில் கோயர் Man of Steel திரைக்கதை எழுதப் போய்விட்டார் (இதன் கதை நோலனுடையது). பின்னர் நோலனின் சகோதரர் ஜொனாதன் நோலன் திரைக்கதையை எழுதி முடிக்க, அதனை இன்னமும் மெருகேற்றினார் நோலன்.

இப்படித்தான் இப்படத்தின் திரைக்கதை உருவானது. 

படத்தை எப்படி உருவாக்கினார்கள்; அதன் தொழில்நுட்ப தகவல்கள் எதுவும் இப்போது தேவையில்லை என்று நினைக்கிறேன். அதேபோல் The Dark Knight பற்றிய கட்டுரையும் இப்போது தேவையில்லை. அதைப் பின்னர் முடிந்தால் பார்த்துக்கொள்ளலாம். 

ஆகவே, இந்தக் கட்டுரையில் நாம் என்ன பார்க்கப் போகிறோம்? 

படத்தைப் பற்றி இதுவரை வந்துள்ள அத்தனை தகவல்களையும் ஒரே மூச்சில் பார்த்துவிடுவதே நோக்கம். Let's see. 

இந்தப் படத்தைப் பற்றி, இதன் நாயகன் க்ரிஸ்டியன் பேல் சொல்வது - "இந்தப் படம் உறுதியானதும், நோலன் என்னை அவரது வீட்டுக்கு அழைத்தார். அங்கேதான் படத்தின் திரைக்கதை எனக்கு அளிக்கப்பட்டது. அதுவும், அதை அங்கேயே அமர்ந்து படித்துமுடித்து, அதன்பின்னர்தான் வெளியேறவேண்டும் என்ற கண்டிஷனுடன். மதியம் அமர்ந்து படிக்க ஆரம்பித்த நான், ஏழெட்டு மணிநேரங்கள் கழித்தே மெதுவாகப் படித்துமுடித்தேன். வெளியே மிகவும் இருட்டிவிட்டது. நான் உள்ளே நுழைந்ததுமே நோலன் அத்தனை கதவுகளையும் சாத்திவிட்டார். ஒருமுறை படித்தபின், மறுபடியும் படித்தேன். ஏனெனில், முதல்முறை படிக்கும்போதே இதுதான் இந்த சீரீஸின் கடைசி அத்தியாயம் என்பது நன்றாகவே புரிந்துவிட்டது. முழுக்கவும் என் மனதில் பதியும்வரை படித்த நான், வெளியே வந்தபோது எனது முகத்தில் புன்னகை"

திரைப்படத்தின் ஒவ்வொரு அம்சமும் நோலனால் பயங்கர ரகசியமாகவே இதுவரை காக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் போட்ட பல கண்டிஷன்களை தயவுதாட்சண்யம் பார்க்காமல் ரிஜக்ட் செய்துவிட்டார் நோலன். அந்தக் கண்டிஷன்களில் ஒன்று - படத்தை 3Dயில் வெளியிடவேண்டும் என்பது. அது நோலனிடம் நடக்கவில்லை. அதேபோல், படத்தை டிஜிட்டலாகப் படம் எடுக்காமல், இன்னமும் ஃபில்ம் ரோலை வைத்தே எடுத்திருக்கிறார் நோலன். இந்த ஆண்டு சம்மரில் வெளியான படங்களில், இந்தப் படம் மட்டுமே ஃபில்ம் உபயோகித்து எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த இடத்தில் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். நோலன் எடுத்த முதல் முழுநீள action படமே Batman Begins தான். அது அவரது திரைவாழ்வின் நான்காவது படம். அதுவரை அதுதான் அவரது முதல் மெகா பட்ஜெட் படமும் கூட. அது 2005ல் வெளியாக, அதன்பின் 2008ல் வந்த நோலனின் ஆறாவது படமான Dark Knight படமோ, உலக சூப்பர் ஹீரோ வரலாற்றிலேயே ஒரு பில்லியன் டாலர்கள் வசூலித்த முதல் படமாகவும், ஆஸ்கர் (சிறந்த துணை நடிகர் - ஹீத் லெட்ஜர்) வாங்கிய முதல் சூப்பர்ஹீரோ படமாகவும், உலக action படங்களில் அதுவரை வந்தவற்றிலேயே சிறந்ததாகவும் இருந்தது. இப்போது வெளியாகப்போகும் Dark Knight Rises, அவரது எட்டாவது படம் மட்டுமே. ஒவ்வொரு Batman படங்களுக்கு இடையிலும் ஒரு சைக்கலாஜிகல் த்ரில்லர் எடுத்துவந்திருக்கிறார் நோலன். முதலிரண்டு Batman படங்களுக்கு இடையே The Prestige வெளிவர, இரண்டாவது - மூன்றாவது Batman படங்களுக்கிடையே Inception வெளிவந்தது.

இன்செப்ஷன் படத்துக்காக ஸ்பெஷல் எஃபக்ட் ஆஸ்கர் வாங்கிய க்ரிஸ் கார்பௌல்ட்(Chris Corbould), "இந்த மூன்று படங்களை எடுக்கும்போதும் எங்களது குறிக்கோள் ஒன்றே ஒன்றாகத்தான் இருந்தது. அது என்னவென்றால், ஒவ்வொரு படத்தை விடவும் அடுத்த படத்தை மிகச்சிறந்த action படமாக எடுப்பதே. இரண்டாம் பாகம் உலகின் சிறந்த action படமாக இதுவரை இருந்துவந்திருக்கிறது. இப்போது இந்த மூன்றாம் பாகம், அதை முறியடிக்கும் என்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லவே இல்லை" என்று சொல்லியிருக்கிறார். நோலனின்மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கை அத்தகையது.


The Dark Knight Rises படத்தை டிஸம்பர் 2010ல் எழுதத் துவங்கியபோது நோலனைப் பற்றிய கட்டுரை ஒன்று Los Angeles Times பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது (கீழேயுள்ள கட்டுரைகளில் நிர் ஒன்றைப் படிக்கவும்). அந்தக் கட்டுரை நோலனைப் பற்றி இவ்வாறாக ஆரம்பிக்கிறது. ’உலகமே கடுமையாக கூச்சல்போட்டுக்கொண்டிருக்கும்போது, அந்தக் கூச்சலின் நடுவே அமர்ந்து ஒரு நாவல் எழுத முயற்சிக்கும் நபரைப் போன்றவரே நோலன்'. அந்தக் கட்டுரையில், நோலன் அதுவரை செல்ஃபோனோ அல்லது மின்னஞ்சலோ இல்லாதவர் என்றும், ராபின்ஸன் க்ரூஸோ போன்ற ஒரு தாடியை வளர்த்திக்கொண்டு, மலிபுவில் அமர்ந்துகொண்டு எதையோ எழுதிக்கொண்டிருக்கிறார் என்று யாரோ ஒரு முனிவரை வர்ணிப்பதுபோல் எழுதியிருக்கிறது.

"இன்டர்நெட்டை நான் பொதுவாக உபயோகிப்பதில்லை. ஏனெனில், அப்படி உபயோகிக்காதபோது நிறைய யோசிப்பதற்கான நேரம் எனக்குக் கிடைக்கிறது" என்பது நோலனின் கூற்று.

ஆஸ்கரில் The Dark Knight rule என்ற ஒரு புது விதியையே நோலனின் படம் எழுதியிருக்கிறது என்றும் அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. அதாவது, The Dark Knight வெளியானபோது, அடுத்த ஆண்டான 2009ல் சிறந்த ஐந்து படங்கள் நாமிநேஷனில் அப்படம் இடம்பெறவில்லை. அதற்கு அடுத்த ஆண்டே ஆஸ்கரில் சிறந்த படத்துக்கான பிரிவில் பத்து படங்கள் இடம்பெற ஆரம்பித்தன. இதுதான் நோலனின் தவிர்க்கமுடியாத presence என்று சொல்கிறது அக்கட்டுரை. 

திரைப்படங்களில் ஸிஜி உபயோகிப்பது நோலனுக்குப் பிடித்தமில்லாத விஷயம் என்றும் அதே கட்டுரையில் காண்கிறோம். தவிர்க்கவே முடியாது என்ற நிலை வந்தால் மட்டுமே நோலன் ஸிஜி உபயோகிப்பார். மற்றவை எல்லாமே ஸ்பெஷல் எஃபக்ட்கள் மற்றும் நிஜமான செட்கள். காரணம்? "ஒவ்வொரு படத்தின் முடிவிலும், அப்படம் எடுப்பதற்காக படப்பிடிப்பின் உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதற்காக ஸிஜியின் மூலம் எந்தக் குறுக்குவழியையும் நாங்கள் உபயோகித்ததில்லை என்பதில் எனக்கு உண்மையில் பெருமைதான்" என்கிறார் நோலன். அதாவது, அவரைப்பொறுத்தவரை, ஒரு அழுத்தமான கதையே முதல் முக்கியத்துவம் பெறுகிறது. அக்கதையைக் காட்டுவதற்கான வழிகளில், ஸிஜி அவசியம் என்று பட்டால் மட்டுமே, அப்போது அது உபயோகிக்கப்படுகிறது. "இருபது வருடங்களுக்கு முன்னர் ஸிஜி உபயோகிக்காமல் எடுக்க முடிந்த ஒரு ஷாட்டை, இப்போது ஸிஜி இருக்கிறது என்பதற்காக மட்டுமே அதை உபயோகப்படுத்தி எடுக்கவேண்டும் என்ற நிலை வந்தால், அதை நான் மறுத்துவிடுகிறேன். பழைய காலத்தில் எப்படி அந்த ஷாட் எடுக்கப்பட்டதோ அப்படித்தான் இப்போதும் அது எடுக்கப்படவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" - நோலன். 

இன்செப்ஷன் படத்தின்போது அதில் நடித்த ஜோஸஃப் கார்டன் லெவிட்டிடம் (Joseph Gordon-Levitt) "உங்களது கையில் ஒரு சிறிய bag இருக்கிறதே..அந்த bagல் என்ன இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்பது போன்ற கேள்விகளை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பாராம் நோலன். இதனால் கதாபாத்திரங்கள் பற்றிய ஸ்டடியில் அந்த நடிகர்கள் ஈடுபட்டு மேலும் தங்களது நடிப்பை மெருகேற்ற முடிந்தது.


 படத்தை 3Dயில் எடுக்காமல்  70 MM ரெகுலர் ஃபார்மேட்டிலேயே நோலன் எடுப்பதற்கு என்ன காரணம்?


3டியில் படத்தின் துல்லியம் அதிகரித்தாலும், படத்தின் திரையில் தெரியும் பிரம்மாண்டம் சுருங்கிவிடுகிறது. கண்ணெதிரே தெரியும் கதாநாயகனின் பிரம்மாண்டம் மறைந்து, படத்தின் தொழில்நுட்பமே ஆடியன்ஸின் கண்ணுக்கு முன் நிற்பதில், நான் சொல்லவந்த விஷயங்கள் மறைந்துவிடுகின்றன. எனவேதான் எனக்கு 3டி பிடிக்காது என்கிறார் நோலன்.

இதனாலேயே ஐமேக்ஸ் ஃபார்மேட்டில் இப்படம் எடுக்கப்படுகிறது (பாதிக்கு மேல்).

இன்னொரு விஷயம் - இந்தப் படம், The Dark Knight முடிந்து எட்டு வருடங்கள் கழித்தே ஆரம்பிக்கிறது அல்லவா? அந்தப் படத்தின் இறுதியில், பேட்மேனும் கமிஷனர் கோர்டனும் ஒரு தியாகத்தைப் புரிந்திருக்கின்றனர். டூஃபேஸின் மரணத்தின் உண்மை வெளியே தெரியக்கூடாது என்ற தியாகம். அந்தத் தியாகம் பலிக்கவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டுமோ அதை இந்தப் படத்தின் ஒபனிங் ஆடியன்ஸுக்குத் தரப்போகிறது என்பது நோலன் சொல்லியுள்ள செய்தி. அதாவது, இந்த மூன்றாம் பாக ஆரம்பத்தில், கோதம் நகரம் கிரிமினல்களிலிருந்து விடுபட்டு அமைதியாக விளங்குகிறது. அதுதான் பேட்மேன் மற்றும் கமிஷனர் கோர்டனின் தியாகத்தின் பரிசு.

இந்தப் படம் சொல்லவரும் தகவல்கள் சுருக்கமாக என்னவாக இருக்கக்கூடும்?

இதோ ஒரு வெறிபிடித்த விசிறி, அவராகவே ட்ரெய்லரை ஃப்ரீஸ் செய்து பின்னணியில் வரும் பல விஷயங்களை இங்கே விளக்கியிருக்கிறார். இதைப் பாருங்கள். ஆச்சரியகரமான விஷயம் என்னவெனில், படத்தின் பல்வேறு விமர்சனங்கள் நேற்றே வந்துவிட்டன. அந்த விமர்சனங்கள் அத்தனையையும் படித்துவிட்டேன். அதில் உள்ள பல விஷயங்களை இந்த விசிறி ஆல்ரெடி வெறும் ட்ரய்லர்களைப் பார்த்தே கண்டுபிடித்திருக்கிறார் என்பதே.


இன்னொரு விஷயம் - படத்தின் மிக முக்கியமான ஒரு விஷயம் பற்றி ஏற்கெனவே இந்தக் கட்டுரைகளில் ஒன்றில் நான் எழுதிவிட்டேன். அந்த விஷயம் அப்படியே படத்திலும் வைக்கப்பட்டிருப்பதை படத்தின் விமர்சனங்கள் படித்துதான் அறிந்துகொண்டேன். எந்த விஷயத்தையும் ஒழுங்காக ஹோம் வொர்க் செய்தால் கிடைக்கும் நன்மையே இது. படம் வரட்டும். பட விமர்சனத்தில் அது என்ன விஷயம் என்று எழுதுகிறேன்.

No comments:

Post a Comment